Wednesday 16 November 2011

பரமக்குடி கலவரம்: துப்பாக்கிச் சூடு முறையற்றது

தியாகி இமானுவல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், அவர்களை தடுத்து நிறுத்த காவல் துறையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச் சூட்டில் - இன்று காலை உயிரிழந்த ஒருவருடன் சேர்த்து - 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  


தியாகி இமானுவல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனை - அவர் அங்கு அனுமதிக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று காவல் துறையினர் கருதிய காரணத்தினால் - வழியிலேயே கைது செய்யப்பட்டதால், அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது.

காவல் துறையினர் இப்படி எண்ணியதற்கு ஒரு காரணம் இருந்துள்ளது. அது, கடந்த சனிக்கிழமை எம் பச்சேரி எனும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பழனி குமார் என்கிற ஒரு மாணவர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்துள்ளது. வன்முறை ஏதும் ஏற்படாமல் இருக்க இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து. 

கொல்லப்பட்ட மாணவர் பழனி குமாரின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு தியாகி இமானுவல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த ஜான் பாண்டியன் திட்டமிட்டிருந்தார் என்றும், பழனி குமார் வீட்டிற்குச் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டால், அது சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று காவல் துறையினர் கருதியுள்ளனர். எனவே, வரும் வழியிலேயே அவரை கைது செய்துள்ளனர். இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள், பரமக்குடியில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுவே துப்பாக்சிச் சூட்டில் முடிந்து 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்படி ஒரு வன்முறையான சூழல் ஏற்படாமல் தடுத்திருக்க முடியுமா என்பதே பொதுவாக எழும் கேள்வியாகும். பழனி குமார் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு தியாகி இமானுவல் நினைவிடத்திற்கு செல்ல ஜான் பாண்டியன் திட்டமிட்டிருந்தார் என்றால், அதனை காவல் துறை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் உள்ளதா? நீங்கள் பழனி குமார் வீட்டிற்குச் சென்றால், அதன் காரணமாக வன்முறை ஏற்படலாம் என்பதை அவரிடம் விளக்கி, நினைவிடத்திற்கு மட்டும் சென்றுவிட்டுச் செல்லுங்கள் என்று கட்டாயப்படுத்தியிருக்க முடியாதா? (அங்கு கலவரம் வெடித்த பிறகு புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்ட பல தலைவர்களை காவல் துறை அனுமதி மறுத்தபோது அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனரே!) காவல் துறையினரால் அவ்வாறு நிச்சயம் செய்திருக்க முடியும். அதனை ஜான் பாண்டியன் ஏற்க மறுத்திருந்தால் பிறகு அவரைக் கைது செய்திருக்கலாம். அதை செய்யாமல், சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று காரணம் காட்டி, வழியிலேயே இடைமறித்து கைது செய்ததே அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வழிவகுத்துவிட்டது என்றும் கருத இடமேற்படுகிறது.

சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பதற்காக எந்த ஒரு ‘தலைவர’யும் அவருடைய விருப்பத்திற்கு எதிரான கைது செய்வது முதிர்ச்சியான நடவடிக்கையாகத் தெரியவில்லை. பல்வேறு வழக்குகளில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதனை வலியுறுத்தி உள்ளனர். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, சட்ட ரீதியான உரிமை மறுக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளனர். சட்டம் ஒழுங்கை - தேவையான அளவிற்கு காவல் படைகளை நிறுத்தி நிலைநாட்ட வேண்டியதே காவல் துறையின் பணி சார்ந்த பொறுப்பாகும். எனவே, சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்க சட்ட ரீதியான சரியான நடவடிக்கை அல்ல.



ஜான் பாண்டியன் வந்தால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று முன்னெச்சரிக்கையாக காவல் துறை கைது செய்தது, பிறகு ஏன் கலவரம் நடந்தது? ஆக, சட்டம் ஒழுங்கு யாரால் கெடும் என்பதை காவல் துறை சரியாக கணிக்கவில்லை என்பது புலனாகிறதே. கலவரம் ஏற்படும் என்று கணித்தால், அதனை முனையிலேயே தடுக்கும் வல்லமையோடுதான் - கூடுதல் படைகளை கொண்டு வந்து நிறுத்தி, அப்படி ஒரு சூழல் ஏற்படும் போது நிலைமையை கையாள வேண்டும். அதைச் செய்யாமல், ஜான் பாண்டியனை கைது செய்ததன் மூலம் கலவரத்திற்கு வித்திட்டுவிட்டது அல்லது கலவரம் நிகழ்த்த திட்டமிட்டிருந்தவர்களுக்கு வழியேற்படுத்தித் தந்துவிட்டது. இதன் விளைவே 7 பேரின் உயிர் பறிப்பு. சமூகத்தின் அடித்தட்டு மக்களான தாழ்த்தப்பட்ட மக்களில் 7 பேரின் குடும்பம் இப்போது நடுத்தெருவில்! 

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட முறை தவறானத

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காவல் வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தினர், அங்கிருந்த கடைகளுக்கு தீ வைத்தனர், காவல் துறையினர் மீது கட்டைகளையும், கற்களையும் வீசித் தாக்கினர். எனவே கலவரத்தை ஒடுக்க முதலில் தடியடி நடத்தி, பிறகு கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்த முடியாததால் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், அதற்குப் பிறகும் கலவரம் அடங்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று எப்போதும் கூறும் கதையை காவல் துறையினர் கூறியுள்ளனர்.

அவர்களின் முதல் தவறு, சனிக்கிழமை அங்கு ஒரு தாழ்த்தப்பட்ட மாணவர் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவிய சூழலில், கலவரத்திற்கான வாய்ப்பு உள்ளது என்று கணித்த காவல் துறையினர், அதனை முளையிலேயே முடக்கும் அளவிற்கு போதுமான படைகளை இறக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லையே, ஏன்? இரண்டாவதாக, துப்பாக்கிச் சூடு நடத்தித்தான் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில், எதற்காக தலையை நோக்கியும், மார்பைக் குறி வைத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது? கலவர சூழலை கட்டுக்குள் கொண்டு வர ஒரு அச்சுறுத்தலாகவே துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்பது கட்டளை. அப்படிச் சுடும்போதும், முழுங்காலைக் குறிவைத்தே சுட வேண்டும் என்று காவல் துறையினருக்கான நடைமுறைக் கையேடு (Drill Manual) கூறுகிறது. இதனை மனித உரிமையாளர்களும், நீதிமன்றங்களும் பலமுறை எடுத்துக் கூறிவிட்டன. அப்படியிருந்தும், நடைமுறையைக் கையேட்டிற்கு முரணாக முழங்காலுக்கு மேல் குறிவைத்து சுட்டது ஏன்? அதன் விளைவுதானே 7 பேர் உயிர் பறிப்பு? இது திட்டமிட்ட கொலையல்லவா? இதற்குத்தான் தமிழக காவல் துறையும், தமிழக அரசும் பதில் கூற வேண்டும். 

தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்திருக்கிறது. பத்தோடு பதினொன்று. இதனால் வெளிவரவுள்ள உண்மை எந்த உயிரையும் திரும்ப அளிக்கப்போவதில்லை. எனவே, இதன் பிறகாவது, சொந்த நாட்டு மக்களை, சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் சுட்டுப் பொசுக்குவதை காவல் துறை நிறுத்த வேண்டும். விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆகிவிட்டது, எத்தனையோ விடயங்கள் இந்த நாட்டில் மாறிவிட்டது. ஆனால் காவல் துறை மட்டும் இன்னமும் வெள்ளைக்கார காலத்து அடக்குமுறைத் துறையாகவே உள்ளது. அதன் பார்வையும் அணுகுமுறையும் மாற வேண்டும், மாறாதவரை இப்படிப்பட்ட கலவரக் கொலைகள் எதிர்காலத்திலும் நடக்கும்.



   நன்றி வேப்துனியா

1 comment: